சென்னை: சென்னையில் முகக் கவசம் அணியாத 1,278 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக முகக்கவசம் அணியாத வர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டல அமலாக்க குழுவினரால் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முகக்கவசம் அணியாதவர் களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்ற 16ஆம் தேதி ஒருநாள் மட்டும் சென்னையில் முகக்கவசம் அணியாத 1,278 தனிநபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அதே தேதியில் நடைபெற்ற ஏழு பொது மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காததால் ரூ.26,600 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின் பற்றாத 48,033 தனிநபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 81 லட்சத்து 63 ஆயிரத்து 590 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதற்கிடையே கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்ட நான்கு லட்சம் பேர், இரண்டாம் தவணைக்காகக் காத்திருக்கின்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை, கிண்டி 'கிங்' கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைக்கு எஸ்.கே.சி.எஸ். நிறுவனம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தடுப்பூசி கையிருப்பு குறைவு குறித்து மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி கிடைத்ததும் காத்திருப்போருக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்படும் என்றும் கூறினார்.

