மதுரை: "அடுத்த ஆதீனம் நான்தான்," என தன்னைத்தானே நித்யானந்தா அறிவித்துள்ளது 'காமெடி' என்று மதுரை ஆதீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதினமாக இணையம் வழியாக பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்யப்போவதாகவும் பேஸ்புக் பதிவில் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இம்மாதம் 13ஆம் தேதி இறந்தார்.
அதற்கு முன்னதாகவே அறிக்கை வெளியிட்டிருந்த நித்யானந்தா, 2012ல் இளைய ஆதீனமாக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதால் இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தாவை மதுரை ஆதீனம் நீக்கினார்.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் 2019ல் சுந்தரமூர்த்தி என்பவரை இளைய ஆதீனமாக அறிவித்து அவருக்கு ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் என அருணகிரி நாதர் பெயர் சூட்டினார்.
இவர், இம்மாதம் 23ஆம் தேதி மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் "293வது பீடாதி பதியாக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இனி என் பெயர் பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள். இணையம் வழியாக ஆசீர்வாதம் வழங்கப்படும். இறந்த ஆதீனத்தின் பெயரில் பல்கலை அமைக்கப்படும்," என்று நித்யானந்தா கூறியதாக விகடன், தின மலர் உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்தன.
இது குறித்து மதுரை ஆதீன மடத்திடம் கேட்டபோது, "ஆதீன மடத்திற்கும் நித்யானந்தாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது இதுபோன்று அறிவிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். அவர் மீது பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வழக்குகள் உள்ளன. அதிலிருந்து தப்பிக்கவே ஏதோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு அவர் 'காமெடி' செய்து வருகிறார்," என்று தெரிவித்தது.
"பிற ஆதீனங்களின் முன்னிலை யில் 293வது மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் 23ஆம் தேதி முறைப்படி பொறுப்பு ஏற்பார்," என்று மதுரை ஆதின மடம் மேலும் கூறியது.
இதற்கிடையே 293வது ஆதீன நியமனத்திற்கான நடைமுறைகள் ஏற்கெனவே முடிவுற்று 10 நாட்கள் தொடர்ந்து குருபூஜை நடத்தப்பட்ட பின்னர் பீடோகரனம் என்னும் பீடத்தில் அமரும் நிகழ்வு நடைபெறஉள்ளது. திருஞான சம்பந்தர் தோற்றுவித்த 1,500 ஆண்டு பாரம்பரியமுள்ள மதுரை ஆதீன மடத்தில் 292வது ஆதீனமாக 1980இல் பொறுப்பேற்று 40 ஆண்டுகள் மடாதிபதியாக விளங்கிய அருணகிரிநாதர் இம்மாதம் 13ஆம் தேதி காலமானார்.

