'நாம் தமிழர்' சீமான் கோரிக்கை
சென்னை: புளியந்தோப்பில் பொதுமக்களுக்கு தரமற்ற வீடு கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
"சென்னை மாநகரப் பூர்வக்குடிகளுக்கு மாற்றுக் குடியிருப்பாக புளியந்தோப்புப்பகுதியில் வழங்கப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி வீடுகள் மிகப்பலவீனமாக இருப்பதும் கான்கிரீட் கூரைகளைத் தொட்டாலே உதிர்ந்து விழுவதுமான காட்சிகள் ஆளும் அரசுகளின் நிர்வாகச் சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. ஒரு வீட்டிற்கு ரூ.15 லட்சம் வீதமென செலவினம் மதிப்பிட்டு தரமற்ற வீட்டைக்கட்டி முறைகேடு செய்த முந்தைய அதிமுக அரசின் மோசடித்தனத்தையும் கட்டடத்தின் தரத்தைக்கூட பரிசோதிக்காமல் மக்களை அவசரகதியில் குடியேற்றிய அரசின் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். குடிசையில் இருந்தா லாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்கு மாடி குடியிருப்பு என்று அழைத்துச்சென்று அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்கள். மக்கள் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும் முந்தைய ஆட்சியாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று சீமான் கூறியுள்ளார்.
எழுவர் விடுதலைக்கு மத்திய அரசு தடையாக இருக்கிறதாம்
அவனியாபுரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் எழுவரை விடுவிப்பதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது என்று அவர்களுக்காக அடிக்கடி கவலைப் படும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கணித்துக் கூறியுள்ளார்.
மீன்வளப் பல்கலைக்கழகத்தில்
மாணவர் சேர்ப்பு தொடங்கியது
சென்னை: மீன்வளப் பல்கலைக்கழக பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நேற்று இணையம் வழி தொடங்கியது. பிளஸ்-2 முடித்த மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்புகளில் சேரலாம். இங்கு பி.டெக்., பி.எப்.எஸ்சி., பி.பி.ஏ., உட்பட மொத்தம் 10 வகை படிப்புகளில் 370 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மாணவர்கள், www.tnjfu.ac.in என்ற இணையத் தளத்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் வாங்கும் தமிழகம்
சென்னை: மின்சாரத் தேவையைச் சமாளிக்க குறுகிய கால அடிப்படையில் 750 மெகாவாட் மின்சாரத்தை மின் வாரியம் கொள்முதல் செய்யவிருக்கிறது.
தமிழக மின்சாரத் தேவை தினமும் சராசரியாக 14,000 மெகா வாட்டாக உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தொழிற் சாலைகள் முழுவீச்சில் இயங்குகின்றன. இதனால் மின் தேவை அதிகரித்து உள்ளது. இதையடுத்து குறுகியகால அடிப்படையில் செப்டம்பர் 6 முதல் 30 வரையில் 24 மணி நேரமும் பயன்படுத்துவதற்காக 750 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தத்தை வரவேற்று மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

