ரூ.3 குறைப்பு காரணமாக நாளுக்கு 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிக விற்பனை
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டு இருப்பதால் நாள்தோறும் சராசரியாக 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிகம் விற்பனையாகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு மத்திய அரசுக்கு ரூ.3.55 கோடி அதிக வருவாய் கிடைக்கிறது. இதே நிலை நீடித்தால், ஆண்டுக்கு ரூ. 1,200 கோடி அதிக வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கும்.
இதைச் சாதித்துள்ள தமிழக அரசுக்குப் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலாவும் நன்றி கூற வேண்டும் என்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மாநிலத்தில் புதிய அரசாங்கம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்து இருக்கிறது.
ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு சராசரியாக 9.19 மில்லியன் லிட்டர் பெட்ரோல் விற்பனையானது. பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதும் ஆகஸ்ட் 14 முதல் நாள்தோறும் சராசரியாக 12% பெட்ரோல் அதிகம் விற்பனையாகிறது என்று அவர் கூறினார்.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மத்திய அரசுக்கு அதிக லாபம் கிட்டும் என்று சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அடுத்த நிதி ஆண்டு முதல் வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக மாநில அரசாங்கம் வருடாந்திர பொருளியல் ஆய்வு அறிக்கையை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அதிமுக அரசாங்கம் 110வது விதியின் கீழ் அறிவித்த பல்வேறு திட்டங்களையும் புதிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக உள்ளது என்றும் பல அம்சங்களில் முடிவு எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

