சென்னை: தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓசூர் நகரம், உலகிலேயே ஆக அதிக வேகத்தில் மக்கள்தொகை பெருக்கம் இடம்பெற்று வரும் நகர்களில் 13வது இடத்தில் உள்ளது.
அந்த நகரில் ஆண்டுக்கு 5.38 விகிதம் அளவில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது என்று 'விசுவல் கேப்பிட்டலிஸ்ட்' என்ற இணைய வெளியீட்டு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் உலக மக்கள்தொகை 8.1 பில்லியனை எட்டும். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள பல நகர்களிலும்தான் மக்கள்தொகை பெருக்கம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஐநா அமைப்பின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி 2020 முதல் 2025 வரை வருடாந்திர சராசரி மக்கள்தொகை பெருக்கம் எப்படி இருக்கும் என்பதை 20 நகரங்களை அடிப்படையாக வைத்து அந்த அறிக்கை ஆராய்ந்தது.
ஓசூரில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 1.10 லட்சம் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
2019ல் ஓசூரை தமிழக அரசு மாநகராட்சியாக மாற்றியது. கடல்மட்டத்துக்கு 3,000 அடி உயரத்தில் உள்ள ஓசூர், இந்தியாவின் தலைசிறந்த தொழில்துறை மையம்.

