சென்னை: செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்க அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
''இப்போது வரை செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. முதல்வரும் இதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். பள்ளிகளைத் திறப்பதற்கு தேவையான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. நாங்களும் அதை ஆய்வு செய்து, அதில் புதிதாக எதையாவது சேர்க்க வேண்டுமா அல்லது அதை அப்படியே பின்பற்றலாமா என்று யோசித்து வருகிறோம்.
"வகுப்பில் மாணவர்கள் இடைவெளிவிட்டு உட்கார வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், ஐம்பது சதவிகித மாணவர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும், அவர்களுக்குத் தேவையான கிருமி நாசினிகள் வழங்கப்பட வேண்டும், பள்ளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
"அந்தந்த மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு பள்ளிகள் தயார்ப் படுத்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1ஆம் தேதி அன்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பதில் எல்லா வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம்," என்று அமைச்சர் கூறியதாக 'இந்து தமிழ் திசை' தெரிவித்தது.
"பணி நிரவல், கலந்தாய்வு ஆகியவை முடிந்த பிறகு ஆசிரியர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் தெரிவித்தார்.

