சென்னை: சுங்கக் கட்டணங்கள் உயர்த்துவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
"தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 23 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 8% கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. எந்தவிதமான வெளிப் படைத்தன்மையும் இல்லாமல் சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
"தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சுங்கச் சாவடிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
"தமிழகத்திலுள்ள 48 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 24 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
"அவை தவிர்த்து, மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 24 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
"சுங்கக் கட்டண உயர்வு ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்றுதான்; இதில் புதிதாக எதுவும் இல்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. இது மக்களின் மனநிலை, நாடும் நாட்டு மக்களும் எதிர்கொண்டு வரும் சூழல் ஆகியவற்றை பொருட்படுத்தாத கருத்து ஆகும்.
"கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசின் பொருளாதாரம் முதல் அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை வரை அனைத்தையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வு என்பது காரில் பயணிக்கும் பணக்காரர்களை மட்டும்தான் பாதிக்கும் என்று கருதக்கூடாது.
"சரக்குந்துகளுக்கு கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் போது, அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்டிப்பாக உயரும். பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும்போது தனியார் பேருந்துகளின் கட்டணம் உடனடியாகவும் அரசு பேருந்துகளின் கட்டணம் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகும் உயர்த்தப்படும். இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவர். அந்த வகையில், சுங்கக்கட்டண உயர்வு அனைவரையும் பாதிக்கும் நடவடிக்கையாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே முழுமையாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதன் பின்னர், பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி.
ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும் பாலானவை அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன.
ஆனால், எந்தக் காரணத்தையும் கூறாமலேயே அனைத்து நெடுஞ்
சலைகளிலும் முழுமையாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது மட்டு மின்றி, ஆண்டுக்கு ஆண்டு கட்டண உயர்வு செய்யப்படுவது மக்கள் மீது நடத்தப்படும் பொரு ளாதாரத் தாக்குதல் ஆகும். இதை ஏற்கவே முடியாது," என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

