சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரின் சென்னை பங்களாவில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது.
மேலும் இரண்டு கிலோ தங்கம், 8.5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகியது.
அப்போது பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் செல்வாக்கு மிக்கவராக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு தினகரன் தரப்பை அணுகியதாகத் தெரிகிறது.
மேலும், தேர்தல் ஆணையத்தில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தை வாங்கித்தர இயலும் என்று தினகரன் தரப்புக்கு உறுதி அளித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுன், இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைதாகினர்.
இது தொடர்பாக அப்போது ஊடகங்களில் பல்வேறு பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. பின்னர் தினகரன் உள்ளிட்டோர் பிணையில் விடுதலையான நிலையில், சுகேஷ் சந்திரசேகர் மட்டும் இன்னும் சிறையில் உள்ளார்.
அவர் பல்வேறு தரப்பினரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன. இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பங்களா உள்ளிட்ட சுகேஷ் சந்திரசேகருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது.
மேலும், சென்னையில் உள்ள சுகேஷின் பங்களா வீட்டில் 16 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
இதையடுத்து கார்கள், ரொக்கப்பணம், தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சுகேஷின் வீட்டுக்கு 'சீல்' வைத்துள்ளனர்.

