சென்னை: தம் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், கட்சிப் பொறுப்பில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு காணொளிப் பதிவு பாஜக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதன் மூலம் அரசியல் களத்தில் நன்கு அறிமுகமானவர் கே.டி.ராகவன். அவரை மையப்படுத்தி நேற்று காலை சமூக வலைத்தளங்களில் ஓரு காணொளிப்பதிவு வெளியானது.
பாஜகவில் பல ஆண்டுகளாக பாலியல் சீண்டல்கள் நடந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாகவும் அந்த காணொளிப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு எதிராக புகார் தெரிவிக்கக்கூடாது என மிரட்டப்பட்டதாகவும் தம்மிடம் உள்ள மேலும் பல காணொளிப் பதிவுகளை ஆதாரங்களாக வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அந்த காணொளியில் ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொளிப் பதிவு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள கே.டி.ராகவன், நேற்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கை ஓன்றில், தம்மைப் பற்றி தமிழக மக்களுக்கும் தமது கட்சியினருக்கும் நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
30 ஆண்டுகளாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றித் தாம் மக்கள் பணியாற்றி வருவதாகவும் தம்மையும் பாஜகவையும் களங்கப்படுத்தும் நோக்கத்துடன் காணொளிப் பதிவு வெளியாகி உள்ளது என்றும் ராகவன் கூறியுள்ளார்.

