28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு; நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் உட்பட ஆறு நகராட்சிகளின் தரம் உயர்த்தப்படுகிறது.
தாம்பரம் பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் மாநிலம் முழுவதும் உள்ள 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அப்போது, தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள் தொகை 48.45 விழுக்காடாக உள்ளது என்றும் இப்போது அந்த எண்ணிக்கை சுமார் 53 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் நேரு குறிப்பிட்டார்.
எனவே, மாநகராட்சிகள், நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாக கருதப்படுகிறது என்றும் அமைச்சர் நேரு விளக்கம் அளித்தார்.
"நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும் பேருராட்சிகள், ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் மாற்றக்கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் அரசுக்குத் தொடர் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும் பலர் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
நகர்ப்புறத்தன்மை, மக்கள்தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார்.
மேலும், நகர்ப்புறமாக மாறி வரும் பகுதிகளிலும் நகரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் தரத்தை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
"தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கப்படுகின்ற ஊராட்சிகளில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள்.
"சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் முடிவடைகின்றபோது இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும்," என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெளிவுபடுத்தினார்.
அரசின் இந்த நடவடிக்கை காரணமாக தரம் உயர்த்தப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்பு மேப்படுத்தப்படும் என்பதுடன் சொத்து மதிப்பும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

