சென்னை: கோடநாடு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை என்றும் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அவரது அண்ணன் தனபால் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமான பிறகு அவருக்குச் சொந்தமான கோடநாடு வீட்டில் இருந்த சில பொருள்கள் கொள்ளயடிக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த காவலர் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் விபத்து ஓன்றில் சிக்கி உயிரிழந்தார்.
விபத்து என்று முடிவு செய்த போலிசார் விசாரணை முடிந்ததாக அறிவித்தனர்.
இந்நிலையில், அண்மைய சில தினங்களாக கோடநாடு கொலை வழக்கில் போலிசார் மீண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் (படம்) கடந்த வாரம் ஊட்டி போலிசாரிடம் மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், கோடநாடு சம்பவத்தில் மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளது என சயான் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் உலவுகின்றன.
இந்நிலையில் மற்றொரு திடீர் திருப்பமாக, கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை என அவரது சகோதரர் கூறியுள்ளார். தன் தம்பி கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்திருப்பதை அடுத்து, கனகராஜ் விபத்து வழக்கு விரைவில் கொலை வழக்காக மாற்றப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, கோடநாடு வழக்கின் புலன் விசாரணை அறுபது நாள்களில் முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய புதிய ஆதாரங்கள் குறித்த விவரங்கள் எதையும் இப்போது வெளியிட இயலாது என்றும் அவ்வாறு வெளியிட்டால் அவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் நடக்கக்கூடும் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் திருப்பங்களால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

