தூத்துக்குடி: மது அருந்திக்கொண்டிருந்த நண்பர்களின் உளறல் பேச்சு ஒரு சமயத்தில் எல்லை மீறிப் போக, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
மது விருந்து வைத்த அஜித்குமார் என்ற வாலிபரை அவரது சக நண்பர்கள் பலமாக அடித்துத் தாக்கி, அவரை உயிரோடு மண்ணில் புதைத்தனர்.
அவரது தோள்பட்டை அளவுக்கு மண்ணைத் தள்ளி மூடிக்கொண்டிருந்தபோது அவர் மரண பயத்தில் ஓலமிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர, அஜித்குமாரின் நண்பர்கள் தப்பியோடினர். அஜித் உயிர் பிைழத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அஜித்குமாரின் நண்பர்கள் மூவரையும் போலிசார் கைது செய்தனர்.
முத்தையாபுரம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் அஜித்குமார், 24. இவர் சாயம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். தேவ ஆசீர்வாதம் (39), தர்ம முனியசாமி (23), இசக்கி மணி (20) ஆகியோர் அஜித்குமாரின் நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், அஜித்குமார் கைபேசி வாங்குவதற்காக தேவ ஆசீர்வாதத்திடம் ரூ.5,000 கடனாக வாங்கியுள்ளார். ஆனால், அந்தப் பணத்தில் கைபேசி வாங்காமல் நண்பர்கள் நால்வரும் சேர்ந்து மதுகுடித்து செலவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, முத்தையாபுரத்தில் நேற்று முன்தினமும் நால்வரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, தேவ ஆசீர்வாதம் தான் கடனாகக் கொடுத்த ரூ.5,000 பணத்தைத் திருப்பித் தரும்படி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு, "அந்தப் பணத்தில் நாம் எல்லோரும் சேர்ந்துதானே மது அருந்தி செலவழித்தோம். எனவே நான் மட்டும் எப்படி பணத்தைத் திருப்பி தரமுடியும்?" என்று அஜித்குமார் ேகட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகியோர் அருகே கிடந்த கம்பால் அஜித்குமாரை தாக்க, தேவ ஆசீர்வாதம் கையில் வைத்திருந்த கத்தியால் அஜித்குமாரின் முதுகில் குத்தியுள்ளார். தொடர்ந்து நண்பர்கள் மூவரும் சேர்ந்து அஜித்குமாரை உயிரோடு புதைத்தனர்.

