சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஒரு கட்டுக்குள் வந்தாலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் இப்பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் மிரட்டலை ஏற்படுத்தி உள்ளது.
இதை மனதில்கொண்டு, "கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக செய்யப்படுகிறது.
"இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள விரும்பாதவர்கள் தாங்கள் இரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்," என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை போரூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேற்று பேசியபோது, "கேரளாவில் இருந்து விமானம், கடல், ரயில், சாலை மார்க்கமாக வரும் அைனத்து பயணிகளும் 'கொரோனா தொற்றில்லை' என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இச்சான்றிதழை அவர்கள் தங்களது பயணத்தை தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுத்திருக்க வேண்டும். அல்லது தடுப்பூசி இருமுறை போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்," என்றார்.
மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும் எனவும் தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, "தமிழக மக்கள் அடுத்த 10 நாள்களுக்கு மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் கேரளாவில் இருந்து வரு பவர்கள் 'கொரோனா பாதிப்பில்லை' சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணனும் வலியுறுத்தி உள்ளார்.
"கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மருத்துவப் பரிசோதனையைத் தீவிரப்படுத்தும்படியும் எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு 100% தடுப்பூசி போடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்றும் அவர் கூறினார்.

