சென்னை: பேக்கரி போன்ற உணவுப் பொருள் விற்பனைக் கடைகளில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களைப் பார்சல் செய்து தரும்போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தாள்களைப் பிரிக்க எச்சிலையும் நெகிழி பைகளைத் திறக்க ஊதவும் செய்கின்றனர்.
இதனால், கிருமிப் பரவல் அதிகரிக்கும் அபாயம் அதிகம் உள்ளதாகக் கூறி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதி கேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் உணவுப் பொருட்களை கையாள்பவர்கள் எச்சில் தொட்டு பயன்படுத்தக் கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், இந்த அரசாணை பிறப்பிப்பது மட்டும் போதாது.
இதுகுறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறைகளைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

