வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே 'சதி' என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தைக் குறிக்கும் வகையிலான 14, 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பாத்தில் அமைந்துள்ளது ஊத்துக்காடு கிராமம்.
இங்கிருந்து கட்டவாக்கம் செல்லும் சாலையோரம் இருந்த கற்களை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதவன் தனது குழுவினருடன் கள ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், 14, 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வீரன், தனது இனத்தைச் சேர்ந்த மக்களை அல்லது ஊரை அல்லது நாட்டைக் காக்கும் பணியில் போர் புரிந்து வீரமரணம் அடைந்தால் அந்த வீரனின் உடலுக்கு சடங்குகள் செய்து, தீ மூட்டி, அந்த தீயில் வீரனின் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிரை விட்டுவிடுவார். இந்தச் செயலுக்கு 'சதி' என்று பெயர்.
இந்த 'சதி' நிகழ்வில் உயிர்விட்ட தம்பதியின் நினைவை போற்றும் வகையில் அவர்களின் உருவங்களை ஒரு கல்லில் சிற்பமாகச் செதுக்கி அக்கல்லை நட்டு வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவர்.
ஊத்துக்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கற்சிற்பம் 1½ அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதன் அருகிலேயே இருந்த மற்றொரு கல்லானது 15ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

