சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள், குழப்பங்கள் உள்ளிட்ட மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் கோரியுள்ளார்.
அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், "ஜெயலலிதாவின் மரணம் குறித்து கழக ஆட்சியில் முறையாக விசாரிக்கப்பட்டு, தவறு இழைத்தவர்கள் எவராயினும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள்," என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பக்கப் பதிவில், "அஇஅதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களைப் பொறுத்தவரை புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா இதயதெய்வமாக மட்டுமின்றி குலதெய்வமாகவும் வணங்கப்படுகிறார். நான் ஜெயலலிதா நிழலில் மட்டுமே வளர்ந்தவன்.
"2016 செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, விரைவில் அவர் தேறிவிடுவார் என்றுதான் நாங்கள் நம்பினோம்.
"ஆனால், டிசம்பர் 5ல் அவரது திடீர் மரணம் அதிர்ச்சி அளித்தது.
"2017 பிப்ரவரியில் ஜெய லலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்பது ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய முழக்கமாக இருந்தது.
"இதைத்தொடர்ந்து, எனது தலைமையில் 12 உறுப்பினர்கள் அன்றைய அதிபர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை மனு அளித்தோம்.
"அதையடுத்து, 2017 செப்டம்பரில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டது.
"90% விசாரணை முடிவுற்ற நிலையில், 2019 ஏப்ரலில் அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையத்திற்கு எதிராக தடையாணை பெற்றது.
"இந்நிலையில், கடந்த ஈராண்டுகளாக விசாரணை ஏதுமில்லை. கோடிக்கணக்கிலான அரசுப்பணம் செலவானதுதான் மிச்சம்.
"முதல்வர் இப்பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சமர்ப்பிக்கச் செய்து அதன்மூலம் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்துவைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்வர் இதை நிச்சயம் செய்வார் என நம்புகிறேன்," என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளதாக ஒன்இந்தியா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்
ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்ற முடிவு தெரியவந்தால் தான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சியுடன் நிம்மதிப் பெருமூச்சு விடுவான்.

