மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் என்பவர் சொந்தத் தொழில் செய்ய ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
மேலும் பணம் தேவைப்பட்டதால் மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை சென்று அங்கு பாண்டி என்பவரிடம் கடன் கேட்டுள்ளார். பணத்துடன் வருவதாக பாண்டி சொல்லிவிட்டுச் சென்றதால் சாலை ஓரம் அர்ஷத் காத்திருந்தார்.
அப்போது நாகமலை புதுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் வசந்தி அப்பகுதிக்கு சென்று அர்ஷத்திடம் விசாரணை நடத்தினார். அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தைப் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வசந்தி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். தமக்கு, முன்நிபந்தனை வேண்டும் என வசந்தி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வசந்தியை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட கோத்தகிரியில் பதுங்கி இருந்த வசந்தியை தனிப்படை போலிசார் கைது செய்தனர். இவரை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

