சென்னை: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் நலன் தொடர்பாக பேரவை விதி 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகை யில், "1983ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
இவர்களில், 18,944 குடும்பங்களைச் சார்ந்த 58,822 பேர் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பொறியியல் பயில தேர்ச்சி பெற்ற இலங்கைத் தமிழ் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கான கல்வி, மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும். முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி, விடுதி கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒரு முறை 7 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். அதைத்தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு சிலிண்டருக்கு தலா 400 ரூபாய் வீதம் மானியத்தொகை வழங்கப்படும். இதற்காக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும்.
"முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரேஷனில் தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு கிலோ ஒன்றிற்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும். இதற்கான செலவுத் தொகையான 19 லட்சம் ரூபாயையும் அரசே ஏற்றுக்கொள்ளும்," என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

