சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மரபணுச் சோதனைக்கு அனுப்பப் பட்டிருந்த மாதிரிகளில் 80% பேர் டெல்டா வகை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த அளவுக்குத் தொற்று அதி கரித்திருப்பது குறித்து பொதுமக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. இந்த டெல்டா உள்ளிட்ட அனைத்து வகை தொற்றுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையே மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.
தேவையின்றி கடைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூடுவதையும் உணவகங்களில் பலரும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதையும் பொதுமக்கள் தவிர்க்கவேண்டும்.
இவைதான் கிருமிப் பரவல் அதிகரிப்புக்கு முக்கிய காரண மாகின்றன என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாக 'நியூஸ் 18' ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொரோனா மரபியல் மாற்றங்கள் குறித்து சென்னையில் அமைய உள்ள 'ஜீனோம்' ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அடுத்த மூன்று நாள்களில் சோதனை முயற்சியாக இந்த ஆய்வகம் செயல்பட உள்ளது," என்றார்.
தொடர்ந்து பேசியவர், "தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இப்போதுவரை 3,417 மாதிரிகள் மரபணுச் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 2,633 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன. இந்த முடிவுகளில் 80% அதாவது 2,150 மாதிரிகளில் டெல்டா வகை தொற்று பாதிப்பும் 12 மாதிரிகளில் டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பும் இருப்பது உறுதியாகி உள்ளது.
"இறுதியாக வந்து சேர்ந்த 222 மாதிரிகள் அனைத்துமே டெல்டா வகையைச் சேர்ந்தவைதான். அண்மையில் கண்டறியப்பட்ட அனைத்து குழுமங்களிலும் இந்த டெல்டா வகை பாதிப்புதான் கண்டறியப்பட்டுள்ளது," என்று சொன்னார்.

