சென்னை: சென்னையில் உள்ள 'எல் அண்ட் டி' கப்பல் கட்டும் தொழிற்சாலை, 'விக்ரஹா' என்ற ஏழாவது சுற்றுக் காவல் கப்பலை தயாரித்துள்ளது.
ரூ.188 கோடி மதிப்பீட்டில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச் சர் ராஜ்நாத்சிங், கப்பல் பயணத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்திய கடலோரக் காவல் படைக்காக 'எல் அண்ட் டி' நிறுவனத்திடம் இருந்து ஏழு சுற்றுக்காவல் கப்பல்களை வாங்க கடந்த 2015ல் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்தது.
இதன்படி, ஏற்கெனவே 'விக்ரம்', 'விஜயா' 'வீரா', 'வராஹா', 'வரத்', 'வஜ்ரா' ஆகிய ஆறு சுற்றுக்காவல் கப்பல்கள் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஏழாவதாக 'ஐசிஜி விக்ரஹா' கடலோரக் காவல் படையிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடலோரக் காவல் படையில் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீரர்களும் 150 சுற்றுக்காவல் கப்பல்களும் 65 விமானங்களும் உள்ளன. இந்தப் படை உருவாக்கப்பட்டது முதல் கடந்த 40 ஆண்டுகளில் கடல் பேராபத்துகளைத் தடுப்பதில் திறமையுடன் செயல்பட்டு வருவதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
98 மீட்டர் நீளம் உடைய விக்ரஹா சுற்றுக்காவல் கப்பலில் 11 அதிகாரிகள், 110 சிப்பந்திகள் இருப்பர். ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி, நான்கு அதிவிரைவுப் படகுகளைச் சுமந்து செல்லும் வசதியும் இக்கப்பலில் உள்ளது. படம்: ஏஎஃப்பி

