சென்னை: மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சில நாள்களில் அறிவிப்பார் என்று அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அதனை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்தை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் கடந்த இரு மாதங்களாக அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது.
முன்னதாக, அந்த ஒன்பது மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. நாளை 31ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் அம்மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், "மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அடுத்த சில நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை முதல்வர் அறிவிப்பார்," என்று அமைச்சர் நேரு கூறினார்.
மாநகராட்சி விரிவாக்கத்தின்போது அதனுடன் இணைக்கப்படும் கிராமப் பஞ்சாயத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும்வரை அப்பதவிகளில் நீடிப்பார்கள். அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படுவார்கள். மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராமப் பஞ்சாயத்துகள் நீங்கலாகத் தேர்தல் நடத்தப்படும்.

