சென்னை: மாணவர்களின் கல்வி, மன நலனைக் கருத்தில் கொண்டு இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக பாடங்கள் நடத்தப்படாததால் வாரத்தில் ஆறு நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் 50% மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அரசு கூறியுள்ளது.
மாணவ, மாணவியருக்கான அனைத்து அரசு விடுதிகள், தனியாா் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொவிட்-19 கிருமிப் பரவல் மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துவிடாமல் தடுக்க, கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி வரை இக்கட்டுப்பாடுகள் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர், இதுகுறித்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
"மக்கள் கூட்டத்தைத் தவிா்க்கும் வகையில், வரும் 5ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் அனைத்து கடற்கரைகளும் மூடப்படும்.
"வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபடத் தடை தொடரும்.
"கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டத் தின் சூழ்நிலைக்கேற்ப கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம்.
"அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியையும் பின்பற்றவேண்டும்," என முதல் வர் அறிவுறுத்தியுள்ளதாக தினமணி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளிகள் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றும் தயக்கமின்றி பிள்ளைகளைப் பள்ளி களுக்கு அனுப்புமாறும் பெற்றோரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

