வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கக் கூடாது என அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் விடுபட்டுப் போன வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இப்போது வேட்பாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்த கையேட்டை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், வேட்பாளர்கள் தங்க ளுக்கு வாக்கு சேகரிக்கும்போது பரிசுப் பொருட்களையோ, அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்ற உறுதிமொழிகளையோ வாக்காளர்களிடம் அளிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
ஒருவர், எந்த ஊராட்சி மன்றத்தின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்பு கிறாரோ, அந்த ஊராட்சி மன்றத்தின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் விவரம் இடம் பெற்றிருக்கவேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று 21 வயது நிறை வடைந்தவராக இருக்கவேண்டும். வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் பொது வேட்பாளர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.200, ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தலா ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1,000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
இந்நிலையில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக 'இந்து தமிழ் திசை' ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலூர், விழுப்புரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை நேற்று இம்மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் வெளியிட்டார். விழுப்புரத்தில் ஆகமொத்தம் 13,83,687 வாக்காளர்கள் உள்ளனர். அேதபோல், வேலூர் மாவட்டத்தில் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இங்குள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

