சென்னை: எந்த அரசாக இருந்தாலும் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காவல்துறை துணை ஆய்வாளர்களாக தேர்வாகி உள்ள 941 பேர்க்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்கள் எதிர்பார்க்கும் அமைதியான சூழலை உருவாக்கித் தரும் மாபெரும் கடமை காவல்துறைக்கு உள்ளது என்றார்.
"இந்தக் கடமையைப் பணியில் சேரும் அனைவரும் முதலில் நெஞ்சில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். உடல்வளம், மனஉறுதி, அறிவுவளம் ஆகிய மூன்றும் உள்ளவர்களாக நீங்கள் மாற வேண்டும்.
"அநியாயத்தைத் தடுக்க, எப்போதும் தயங்காதீர்கள். எப்போதும் நியாயத்தின் பக்கம் நில்லுங்கள். உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின்முன் நிறுத்துங்கள்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
காவல்துறை எப்போதும் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிவு காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய இவர், தாம் அறிவுறுத்திய அனைத்தையும் காவல்துறையினர் சட்டபூர்வமாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
"குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட, குற்றமே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக, காவல்துறை மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இது உங்கள் ஆசையாகவும் மாற வேண்டும். நம் விருப்பம் செயலாகத் துவங்கினால் தமிழகம் செழிப்படையும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

