தமிழக கோயில் காணிக்கை நகைகளை பாளமாக்கி வங்கியில் இருப்பு வைக்க உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் அரசாங்கம் நிர்வகித்து வரும் இந்து கோயில்களில் திருப்பணிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் நிதி திரட்ட தமிழக அரசு புதிய ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
அரசு கோயில்களில் பக்தர்கள் வழங்கும் சிறுசிறு நகைகளைத் தங்கக்கட்டிகளாக உருக்கி அவற்றை வங்கிகளில் இருப்பு வைத்து வட்டி பெற்று அந்த நிதியை ஆலயத் திருப்பணிகளுக்கும் அறப்பணிகளுக்கும் செலவிடும்படி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
பக்தர்கள், கடந்த 10 ஆண்டுகளில் வழங்கிய நகைகள் எல்லாம் கோயில் பெட்டகங்களில் அப்படியே இருப்பதாகவும் அவை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு தங்கக் கட்டிகளாக உருக்கி சேர்க்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் சனிக்கிழமை பேசிய அமைச்சர் குறிப்பிட்டார்.
உருக்கப்பட்ட தங்கக் கட்டிகள், விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள், கற்கள் எல்லாம் வங்கிகளில் இருப்பு வைக்கப்படும். இந்தத் திட்டத்தை மேற்பார்வையிடுவதற்காக மண்டல அளவிலான மூன்று குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அவற்றுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமை வகிப்பார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர், இந்தச் செயல்திட்டத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்றார்.
பெட்டகங்களில் இருக்கும் நகைகளைச் சரிபார்க்கும் பணிகள் அனைத்தும் ஆலயங்களிலும் அறநிலையத் துறை இணையத் தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
திருத்தணி, பழனி, சமயபுரம், திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்களில் உள்ள தங்க நகைகள் முதலில் சரிபார்க்கப்படும் என்ற அவர், தெய்வங்களை அலங்கரிக்கும் பெரிய அளவிலான தங்க நகைகள் ஆலயங்களிலேயே வழிபாட்டிற்காக வைக்கப்படும் என்றும் கூறினார்.
தங்கக்கட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாய், கோயில் தேர்களைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தச் செயல்திட்டம் பற்றி கருத்துரைத்த மூத்த அதிகாரிகள், தங்கக் கட்டிகளாக மாற்றப்படக்கூடிய சுமார் 2,000 கிலோ தங்க நகைகள் இப்போது கைவசம் இருப்பதாகக் கூறினர்.
இத்தகைய செயல்திட்டம் 1978 முதல் 2010 வரை நடப்பில் இருந்ததாகவும் ஆனால் 2011ல் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசாங்கம் அதை நிறுத்திவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

