சென்னை: மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் 15 நாள்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இம்மாதம் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் இருமுறை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. போடாதவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கிருமி பாதிப்பு காரணமாக ஆங்காங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில், இந்தப் பாதிப்பு அதிகரிக்கும் வேளையில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சட்டசபையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 'பூஸ்டர்' தடுப்பூசி போடுவதில் அரசின் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பினார்.
"உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்தால் 'பூஸ்டர்' தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்," என மா.சுப்பிரமணியன் கூறினார்.

