சென்னை: பத்திரப்பதிவில் முறைகேடுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சார்பதிவாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆறு மாதங்களுக்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் எளிமை ஆக்கப்படும் என்றார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறினார்.
"கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
"கடந்த 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. இவை குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும்," என்றார் அமைச்சர் மூர்த்தி.
பத்திரப்பதிவு முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிதாக்கப்படுவது அனைத்துத் தரப்பினருக்குமே பயனளிக்கும் என்றார்.

