சென்னை: தமிழ்நாட்டில் துறைமுக மேம்பாடு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, குளிர்பதனக் கிடங்கு உள்ளிட்ட வசதிகளை அமைப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரபு நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதேவேளையில், அம்பத்தூரில் ஜப்பான் நாட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் 'என்டிடி குளோபல் டேட்டா சென்டர்ஸ் மற்றும் கிளவுடு இன்ஃப்ரா ஸ்டரக்சர்' நிறுவனத்தின் சார்பில் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் தகவல் தரவு மையத்தை அமைக்கும் பணி தொடர்பாக காெணாளி வழி முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்த மையத்தால் 700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆகமொத்தம் ரூ.4,500 கோடியில் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெற உள்ளதாக இந்து தமிழ்திசை ஊட கத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், "ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளைச் சேர்ந்த 'டி.பி.வேர்ல்டு' நிறுவனம் மாநிலத்தின் தூத்துக்குடி, திருவள்ளூர், சேலம், கோவை, ஈரோடு ஆகிய ஐந்து முக்கிய மாவட்டங்களில் ரூ.2,000 கோடியில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
"இதனால், ஏராளமானவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வர்த்தகங்கள் பெருகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன," எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

