திருவண்ணாமலை: ஒரு ரூபாய் நாணயத்தைக் கண்டெடுத்த இரண்டு வயது சிறுவன் ஒருவன், அந்த நாணயத்தை வாயில் போட்டு சப்பியபடி விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது, அந்த நாணயம் அவனது தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் முயற்சியால் நாணயம் அறுவை சிகிச்சையின்றி பக்குவமாக வெளியே எடுக்கப் பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த எடப்பாளையம் கிராமத்தில் வசிக்கிறார் லோகநாதன். இவரது மகன் மிதுன், நேற்று முன்தினம் விளையாடிக்கொண்டிருந்தபோது நாணயத்தை விழுங்கியுள்ளான்.
பெற்றோர் சிறுவனை திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு ஓடினர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், தொண்டைப் பகுதியில் (உணவுக் குழாய் தொடங்கும் இடத்தில்) நாணயம் சிக்கியிருந்தது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து காது, மூக்கு, தொண்டை துறையின் தலைமை மருத்துவர் இளஞ்செழியன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவக் குழுவினர் சிறுவனுக்கு மயக்க மருந்து செலுத்தினர். அதன்பிறகு 'Laryngoscopy' முறையில் அறுவை சிகிச்சையின்றி சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கிய நாணயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே அகற்றினர்.
சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், பெற்றோர் அவனை நேற்று வீட் டுக்கு அழைத்துச் சென்றனர்.

