கும்பகோணம்: தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட ெடல்டா மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று 120 கிலோ கஞ்சா போதைப்பொருளைக் கடத்தி வந்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்ப கோணத்தில் தனிப்படை போலிசாரின் வாகனச் சோதனையில் இக்கும்பல் வசமாகச் சிக்கியது.
ஆறு பேரையும் கைது செய்த போலிசார், 120 கிலோ கஞ்சாவுடன் அவர்களது இரண்டு கார்களையும் பறிமுதல் செய்ததாக தினமலர் ஊடகச் செய்தி கூறியுள்ளது.
கைதான ஆறு பேரும் கொடுத்த தகவலை அடுத்து, தமிழகத்தில் கஞ்சா விற்பனை மூலம் பெரும் பணம் சம்பாதித்து வந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த குஷ்பு என்கிற அன்புச்செல்வன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தனிப்படை போலிசார் கூறுகையில், "ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து கார்கள் மூலம் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திவந்த குடபிரதாப்சந்த்,25, பத்ரி, 23, மகேஸ்வரராவ்,32, ரவி, 29, சந்திரா, 27, அப்பாராவ், 29, ஆகிய அறுவரையும் கைது செய்து 120 கிலோ கஞ்சாவுடன் இரு கார்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.
"அவர்கள் கொடுத்த தகவலின் படி, முக்கிய குற்றவாளிகளான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன், 39, சரவணன்,42, கௌதம், 31, ஆகியோரையும் கைது செய்தோம்.
"அவர்களிடம் நடத்திய விசாரணையில், விசாகப்பட்டினம் மலைப்பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலத்தை ரூ.4,000 ரூபாய்க்கு வாங்கி வந்து டெல்டா மாவட்டங்களில் ரூ.22,000க்கு விற்பனை செய்ததாகக் கூறினர். விசாரணை தொடர்கிறது,'' என்றனர்.
தஞ்சாவூரில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறப்பதாகவும் கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமாருக்குத் தகவல் வந்ததை அடுத்து, ஒன்பது பேர் அடங்கிய கும்பலும் போதைப்பொருளும் பிடிபட்டுள்ளன.

