சென்னை: திருச்செந்தூர் அருகே தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த சாலமன் என்பவரைக் கடத்தி, நான்கரை லட்சம் ரூபாய் பணம் பறித்த சம்பவம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த இச் சம்பவம் தொடர்பில், சென்னை வளசரவாக்கம் பெண் காவல் ஆய்வாளர் அமுதா, உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் உள்பட ஆறு பேர் மீது போலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குப்பாபுரத்தைச் சேர்ந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியர் சாலமன், 52.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குப்பாபுரத்துக்குச் சென்ற வளசரவாக்கம் போலிசார், "சாலமனைப் பார்க்கவேண்டும். அவரை அழைத்து வாருங்கள்," என்று சாலமனின் உறவினர் ஒருவரிடம் சொல்லி ஊருக்கு வெளிப்புறம் வரவழைத்துள்ளனர்.
அங்கு வேன் ஒன்றில் காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவக்குமார் நாயர் உள்பட ஆறு பேர் இருந்துள்ளனர்.
சாலமனை வேனுக்குள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
"உன் தம்பி தேவராஜ் என்னி டம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. உன்னைத் தூக்கினால்தான் பணம் வரும்," என்று சாலமனிடம் சிவக்குமார் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
மறுநாள் காலை சாலமனின் குடும்பத்தாரை மிரட்டி நான்கரை லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றபின் அவரை விடுவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்நிலையம் முதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சாலமன் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டது.

