சென்னை: சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழக பொது சுகாதாரத் துறையின் சார்பில் ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்ட மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
உருமாறிய கொரோனா தொற்று எந்த வகையைச் சேர்ந்தது என்பதை கண்டறியும் ஆய்வகங்கள் தமிழ் நாட்டில் இல்லாததால், அதனைக் கண்டறிய ஹைதராபாத் அல்லது புனேயில் உள்ள ஆய்வகங்களுக்கு கொரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டு வந்தன.
இதனால், சோதனை முடிவுகளை பெறுவதில் காலதாமதம் நிலவியது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலேயே எந்த வகை கிருமித்தொற்று என்ப தைக் கண்டறியும் மரபணு பரி சோதனை ஆய்வகத்தை அமைக்க முதல்வர் உத்தரவிட்டார்.
இதன்மூலம் எந்த வகையான கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை 5 மணி நேரத்தில் கண்டறிய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று இந்த மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "உருமாறிய கொரோனா கிருமித்தொற்று எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறியும் ஆய்வகங்கள் தமிழ்நாட்டில் இல்லாததால் காலவிரையம் ஏற்பட்டு வந்தது. ஒரு மாதிரியை பரிசோதனை செய்வதற்கு ரூ. 4,000 அளவிலும் போக்குவரத்து செலவோடு சேர்த்து ரூ.5,000 வரை செலவாகும் சூழல் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உருமாற்றம் அடைந்த கிருமித்தொற்றைக் கண்டறியும் மரபணு பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

