சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாமகவும் தேமுதிகவும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. பாமகவின் இந்த திடீர் முடிவை அடுத்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேமுதிக தரப்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
அக்டோபர் 6ஆம் தேதி, 9ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சிகள் மீண்டும் தேர்தல் களத்தைச் சந்திக்க வரிந்து கட்டியுள்ளன. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான இடங்களைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாமக. அக்கட்சிக்கு அதிமுக தலைமை கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதாக தேமுதிக தலைமை அதிருப்தி தெரிவிக்கும் அளவுக்கு இரு கட்சிகளும் நெருக்கம் பாராட்டின.
எனவே உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் என எதிர்பார்க்்கப்பட்ட நிலையில், தனித்துப் போட்டியிடப்போவதாக பாமக தலைமை அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஒன்பது மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளையரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் தனித்துப் போட்டியிடலாம் எனக் கருத்து தெரிவித்ததாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். எனவே கட்சி வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினர் விருப்ப மனுக்களை உடனடியாக அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் ஜி.கே.மணி மேலும் கூறியுள்ளார்.
பாமக விலகியதை அடுத்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்புண்டு என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அக்கட்சி தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பாமக தலைமை சில கணக்குகளை முன்வைத்தே அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் வன்னியர் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளன.
அதிமுகவுடன் அந்த வாக்குகளைப் பகிர்ந்துகொள்ள பாமக தலைமை விரும்பவில்லை எனக் கருதப்படுகிறது.
"அதிமுக ஆட்சி, செயல்பாடு ஆகியவற்றால் மக்கள் மத்தியில் நிலவிய அதிருப்தி காரணமாகவே பாமக சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்ததாக அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பட்ட செல்வாக்குடன் களமிறங்கினால் சாதிக்க முடியும் எனவும் நம்புகின்றனர். எனவேதான் புதிய வியூகத்துடன் தேர்தலைச் சந்திக்கிறது பாமக," என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பாமக, தேமுதிக முடிவால் தேர்தல் களம் களைகட்டி உள்ளது.
பாமக தலைவர் மணி: கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவு இது

