தேனி: தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்து தமிழக, கேரள எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரு மாநில எல்லையோர கிராமங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்காக நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்தும் பல மாவோயிஸ்டுகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கேரள காவல்துறை உடனடியாக சந்தேகத்துக்குரிய பகுதியில் சோதனை மேற்கொண்டது. எனினும் யாரும் சிக்கவில்லை.
இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் விசாரணையிலும் இறங்கி உள்ளனர்.
மாவோயிஸ்டுகளுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுவதால் தேசிய புலனாய்வு முகமையும் களமிறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில தீவிரவாதிகள் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அதன் பேரில் தீவிரவாதிகளைப் பிடிக்க புலனாய்வு முகமை வியூகம் வகுத்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்முகமையின் எச்சரிக்கையை அடுத்து, தமிழக எல்லையோரப் பகுதிகளான தேனி, கம்பம் மலைப்பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், கேரள எல்லையில் அமைந்துள்ள நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, கம்பம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
காவல்துறையினரும் சிறப்புப் படை வீரர்களும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

