புதுவை: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நைஜீரியர்கள் ஆறு பேரை புதுவை காவல்துறை கைது செய்துள்ளது.
இதையடுத்து நடந்த விசாரணையில் அவர்கள் ஆறு பேரும் விசா காலம் முடிவடைந்த பிறகும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருப்பது அம்பலமானது.
புதுவை, வாழைக்குளம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலிசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டபோது மூன்று கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவ்வீட்டில் தங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த மூன்று ஆடவர்கள், மூன்று பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ஆறு பேரும் கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியா வந்ததும் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் அதிகமாக சட்டவிரோதமாக புதுவையில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
புதுவையைச் சேர்ந்த ஒருவரது உதவியோடு உள்ளூர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைக் குறி வைத்து இவர்கள் போதைப்பொருள்கள் விற்று வந்துள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு உதவிய புதுவை ஆடவர் ஒருவரும் கைதானார்.
இவர்களுக்கு போதைப் பொருள்களை விநியோகித்தது யார், எங்கிருந்து அவை புதுவைக்கு கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

