கோவை: கோவையில் கொவிட்-19 கிருமிப் பரவல் சற்றே தலைதூக்கி வரும் நிலையில், இதை ஒரு கட்டுக்குள் கொண்டுவர இன்று 17ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளையும் சில தளர்வுகளைவும் அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா மூன்றாம் அலையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தடுப்பூசி போடும் பணி மாநிலம்தோறும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் கிருமிப் பரவல் கோவை, சென்னையில் சற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இனி ஞாயிறுதோறும் கோைவயில் திரையரங்குகள் திறக்கப்படாது. அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்துகள், காய்கறி, மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற கடைகள், சந்தைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
"அனைத்து உணவகங்கள், ரொட்டிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 'பார்சல்' சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
"அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது," என்று அறிவித்துள்ளார்.
கூடுதல் தளர்வுகளாக உழவர் சந்தைகளில் 50% கடைகளுக்கு அனுமதியும் உள்ளூர் வாடிக்கையாளர்களைக் கொண்டு பொள்ளாச்சி மாட்டுச் சந்தை இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுப்பாடுகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக குறைந்து வந்த கிருமி பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்துக் காணப்பட்டது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக மேலும் 1,658 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 38 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 226 பேரும் கோவை மாவட்டத்தில் 224 பேரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 29 பேர் உயிரிழந்தனர்.
இவர்களையும் சேர்த்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,246 ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

