சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இவர் அமைச்சராக இருந்த தருணத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாகப் புகார்கள் கூறப்பட்டன.
இந்நிலையில், இதை உறுதிப்படுத்திக்கொள்ள கே.சி. வீர மணிக்குச் சொந்தமான இடங்களில் எல்லாம் சோதனை நடந்தது. சோதனை நடக்கும் இடங்களுக்கு வெளியே அதிமுக தொண்டர்களின் ஆர்ப்பாட்டத்தையும் காணமுடிந்தது.
தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகாவின் பெங்களூரு மாவட்டத்திலும் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது.
இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வருமானத்திற்கும் அதிகமாக 654% அளவுக்கு கே.சி.வீரமணி சொத்து சேர்த்திருப்பதாகவும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் 'சமயம்' ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த ஒருசில மாதமாகவே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
கரூரில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், கோவையில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை 7 மணி முதல் வணிகவரி, பத்திரப்பதிவுத் துறையின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட 28 இடங்களில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, திருமண மண்டபம், நட்சத்திர தங்குவிடுதியிலும் அவரது உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது.
வெற்றியைத் தடுக்கவே சோதனை
"உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாவட்டங்களிலும் அதிமுகவினரை பணி செய்யவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது," என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவினரின் வெற்றி வியூகத்தைத் தடுக்க காய் நகர்த்தப்பட்டுள்ளது,'' என அவர் கூறியுள்ளார்.

