சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தும்படி அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும் மாநிலத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளன.
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அடுத்த அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
"2019ல் அதிக மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. தற்போது 9 மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளதால் அவ்வாறு நடத்தவேண்டிய அவசியம் இல்லை," என்று கூறியுள்ளார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி அளித்துள்ள கடிதத்தில், "இந்தத் தேர்தலைவிட 10 மடங்கு அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்கள் ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டுள்ளன. இருமுறை நடத்தினால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது," என்று கூறியுள்ளார்.

