புதுடெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம், தங்களது ஆணை யத்தின் மீதான இடைக்காலத் தடையை நீக்கினால் விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் இதுவரை 115 சாட்சிகளை விசாரித்திருப்பதாகவும் இன்னும் நான்கு சாட்சிகளை மட்டுமே ஆணையம் விசாரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆணை யம் மேலும் கூறியுள்ளது.
விசாரணையில் இருந்து தடை கோரிய அப்போலோவின் வழக்கும் அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், "எங்களுக்கு இந்த வழக்கில் இருந்து விலக்கு வேண்டும். ஏனெனில், நாங்களும் மருத்துவர்கள்தான். எங்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை. மருத்துவ வல்லுநர்கள் யாராவது விளக்கம் கேட்டால் சொல்லமுடியும். எனவே, எங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும்," என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணை அடுத்த வாரம் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.