திருப்பத்தூர்: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிலோ கணக்கில் தங்க நகைகள், அமெரிக்க டாலர், ஒன்பது சொகுசு கார்கள், பல லட்சம் மதிப்புள்ள மணல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வியாழன் காலை முதல் நள்ளி ரவு 12 மணி வரை இந்தச் சோதனை நீடித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ வாக இருந்த கே.சி.வீரமணி மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தாங்கள் மேற்கொண்ட அதிரடிச் சோதனை குறித்த அதிகாரபூர்வ தகவல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
"பெங்களூருவில் இரண்டு இடங்கள், சென்னையில் ஆறு இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தினோம்.
"ஏறக்குறைய 5 கிலோ தங்க நகைகள் (623 சவரன்), 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.34 லட்சம் பணம், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட ஒன்பது சொகுசு கார்கள், 5 கணினி வன்பொருள்கள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி உள்ளோம்.
"கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலின் மதிப்பு மட்டும் ரூ.30 லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது," என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கண்டனம்
இந்த சோதனை தொடர்பாக அதிமுகவின் தலைவர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். "திமுக அரசு வேண்டுமென்றே அதிமுகவினரை பழிவாங்க நினைக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் வெற்றி பெறுவதற்காக சோதனை என்னும் நாடகமாடுகின்றனர்,'' என்று தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வீரமணி கூறுகையில், 'திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் முன்னாள் அமைச்சர்கள்மீது வேண்டுமென்றே சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது.
"திமுக அரசு போடும் எந்தவிதமான வழக்குகளையும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

