விருதுநகர்: விருதுநகரைச் சேர்ந்த சகோதரர்களான அருண் (25 வயது), ஸ்ரீகாந்த் (22 வயது) இருவரும் 48 மணி நேரத்தில் ஐந்தாயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதித்துள்ளனர்.
இவர்களின் இச்சாதனை அனைத்துலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அருண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஸ்ரீகாந்த் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இன்றுவரை நாள்தோறும் சில மணிநேரத்தை மரக்கன்றுகள் நடும் பணிக்காக இருவரும் செலவிடுகின்றனர்.
"தொடக்கத்தில், வீட்டின் பின்புறத்தில் இரண்டு செடிகளை நட்டு அதனை பராமரித்தோம். பின்னர் அந்த ஆர்வம் தோட்டமாக உருவெடுத்தது.
"இதையடுத்து இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தோம்," என்று குறிப்பிடும் ஸ்ரீகாந்த், இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஐந்தாயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளதாகச் சொல்கிறார்.
மரக்கன்றுகளை நடுவதற்கான இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்த சகோதரர்கள், தினமும் மிதிவண்டியிலேயே பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளனர்.
"இவ்வாறு திட்டமிட்டு ஆறு நாள்களில் ஐம்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டோம். இதற்காக தினமும் எட்டு மணிநேரம் செலவிட்டோம். இவ்வாறு 48 மணிநேரத்தில் இலக்கை சாதிக்க முடிந்தது. அரசாங்கத்துடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்," என்கிறார் ஸ்ரீகாந்த்.
சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சகோதரர்கள் இருவரையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பாராட்டி உள்ளார்.

