சென்னை: மாநில அரசுக்கு உள்ள சிறிய அதிகாரங்களை இழக்க தமிழகம் விரும்பவில்லை என நிதியமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின்னர் மாநிலங்களுக்கு உள்ள சிறிய அளவிலான வரி உரிமைகள் கூட பறிபோய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி செயல்பாடும் அதற்கான தொழில்நுட்பமும் கடினமானதாக உள்ளது என்றும் வரி விவரங்களை தமிழில் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தியாகராஜன் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
"ஜிஎஸ்டி நடைமுறை ஆங்கிலத்தில் இருப்பதால் சிறு, குறு வணிகர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே வரி ஆலோசகர்களை நாடுவதால் அவர்களுக்கு கூடுதல் செலவாகிறது. எனவே ஜிஎஸ்டி நடைமுறையை இணையத்தில் முழுமையாகத் தமிழ்ப்படுத்த வேண்டும்," என்று அமைச்சர் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே இப்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், இதையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்குச் சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

