சென்னை: தமிழகத்தில் நேற்று 2வது முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இதில் இரண்டு லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றைக் கட்டுப் படுத்தும் வகையில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தீவிரமாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'மெகா' தடுப்பூசி முகாமின்போது 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று 2வது 'மெகா' தடுப்பூசி முகாமில் 30 லட்சம் பேர் என்ற இலக்கை எட்ட அரசு முடிவு செய்தது.
அதாவது நேற்று ஒரு நாள் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டு 30 லட்சத்தை எட்டுவது அரசாங்கத்தின் முடிவாகும். கடந்தமுறை தடுப்பூசி மருந்துகள் தீர்ந்துவிட்ட மையங்களில் தற்போது கூடுதலாக மருந்துகள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை கூறியுள்ளது. நேற்றுக் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முகாம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 1,600 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முகாம் நடை பெறும் இடங்களை மாநகராட்சியின் இணையத்தளம் மற்றும் மாநகராட்சியின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வந்தார்.
பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்த அவர், தடுப்பூசி போடுவதற்காக வரிசை யில் காத்திருந்தவர்களிடம் அங்கு உள்ள வசதிகள் பற்றி கேட்டறிந் தார்.
சென்னையில் கடந்த முறை மூன்றரை லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த முறை தடுப்பூசி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் பல இடங்களில் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோல, இம்முறை திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொள் வோருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 'ஆன்ட்ராய்ட்' கைபேசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.