சென்னை: சென்னை திருவேற்காட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 'மிக்ஸி', 'கிரைண்டர்' வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு விடு மோ என்ற அச்சமே அதற்குக் காரணம்.
இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பரிசுகள் வழங்கப்படும் என்று பல்வேறு மாவட்டங்களில் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் நேற்று திருவேற்காடு சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அனைவருக்கும் பரிசு என்று நகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவேற்காடு நகராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 85 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இதனால் மீதமுள்ள 15 விழுக்காட்டினருக்கு அதிரடி இலவச பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 'மிக்ஸி', 'கிரைண்டர்' போன்ற பரிசுப் பொருட்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்றைய முகாமில் தடுப்பூசி போட்ட அனைவருக்கும் பரிசு என்று அறிவிக்கப்பட்டது.