சோழிங்கநல்லூர்: சென்னையில் தனியார் கல்லூரி ஆக்கிரமித் திருந்த ரூ.2,000 கோடி மதிப்புள்ள நிலத்தை தமிழக அரசு மீட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்தக் கல்லூரி அங்குள்ள 91 ஏக்கர் பரப்பளவுள்ள அரசு நிலத்தை கபளீகரம் செய்திருந்தது.
அதில் கட்டடங்களும் கட்டப்பட்டு இருந்தன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,000 கோடி எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சனிக்கிழமை அன்று அந்த நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.
இதனை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
அந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து ேபசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழக அரசுக்குச் சொந்தமான 91 ஏக்கர் நிலங்களை ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்தது. இந்த நிலத்தின் மீதான வழக்கில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசுக்குச் சாதகமானத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.2,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு களுக்கு மேலாக இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன," என்றார். இதற்கிடையே ஆக்கிரமிப்பு செய்த நிலங்களைக் கண்டறிய அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.