சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீர மணியின் வீட்டில் 551 யூனிட் மணல் உள்ளது என திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி ஜோலார் பேட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், கே.சி.வீரமணியின் வீட்டில் மணல் கொட்டப்பட்டிருப்பது குறித்து கனிமவளத்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து, கே.சி.வீரமணி வீட்டிற்குச் சென்ற கனிம வளத்துறை அதிகாரிகள், வீட்டின் பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட மணலை அளவீடு செய்தனர். அப்போது 551 யூனிட் மணல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மணலின் மதிப்பு சுமார் ரூ.33 லட்சம் என்று திருப்பத்தூர் ஆட்சியரிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கனிமவளத்துறை தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து எதற்காக மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது, அதற்குரிய ஆவணங்கள் இருக்கின்றனவா என விசாரணை நடைபெறவுள்ளது. ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் புரிந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அண்மையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு சொத்துக்குவிப்பு, முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.