சென்னை: சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் தயாரிப்புப் பணியை மீண்டும் தொடங்கியுள்ளது ஃபோர்டு நிறுவனம்.
இதனால், வேலை வாய்ப்பை இழக்கக்கூடிய அச்சத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் கார் உற்பத்தி தொழிற்சாலையை மூடிவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறு வதாக கடந்த 9ஆம் தேதி அறிவித்தது ஃபோர்டு நிறுவனம்.
இந்தச் செய்தி, இந்நிறுவனத்தை நம்பியிருந்த 4,000 நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஒருவாரமாக உற்பத்தியும் நிறுத்தப்பட்டதால், வேலை இழப்பு ஏற்படாமல் தடுக்கக் கோரி ஃபோர்டு தொழிற்சங்கத்தினர் மறைமலை நகர் தொழிற்சாலை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தியதாகவும் தகவல்கள் கூறின.
இந்நிலையில், இப்போது ஊழி யர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
"இதுவரை பெற்ற 'ஆர்டர்'களின்படி 30,000க்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் இன்னும் பல மாதங்களுக்கு மறைமலைநகர் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும்," என தெரிவித்துள்ளது.
இத்தகவலால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சற்றே நிம்மதி அடைந் தாலும் தமிழக அரசும் இதர அரசியல் கட்சிகளும் தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான தொடர் நடவடிக்கைகளையும் எதிர் காலம் பாதிக்கப்படாமல் இருப்பதற் கான நிரந்தரத் தீர்வையும் காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

