சென்னை: தமிழகத்தில் உள்ள நிலம் இல்லாத ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதமரின் 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தைச் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறைக்கு மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தது. மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழை
களைக் கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதன் அடிப்படையில், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதமரின் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை செயலர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை செயலரும் உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும் உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை இயக்கு நரும் இருப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

