திருப்பத்தூர்: சிறு வயது முதலே கார்கள் மீது எனக்கு அலாதி பிரியம் இருந்ததால், நான் 7ஆம் வகுப்பில் படிக்கும்போதே பென்ஸ் காரை வைத்திருந்தேன். என்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் காரும் உள்ளது. இவை அனைத்துக்குமே கணக்கு வழக்குகள் உள்ளது. கணக்குக் காட்டமுடியாத வகையில் எதுவுமே எங்களிடம் இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி (படம்) தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, "லஞ்ச ஒழிப்பு போலிசார் கடந்த 16ஆம் தேதி எனது வீடு, கல்லூரி, தங்குவிடுதிகள் உள்ளிட்ட 35 இடங்களில் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கிலான தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ெபாருள்களைப் பறிமுதல் செய்ததாகக் கூறிய தகவல் பொய்யானது.
"எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதுபோன்ற தவறான செய்திகளை பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ந்து பரப்பி வருகின்றனர்," என்று கூறினார்.
"லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகள் என்னிடம் இருந்து 2,746 கிராம் தங்க நகைகள் (300 பவுன்), 2,508 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்), ரொக்கப்பணமாக 10 ரூபாய்க் கட்டு ஒன்று (ரூ.1,000), இதுதவிர ரூ.4,600 என மொத்தம் ரூ.5,600 மட்டுமே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.
"நான் தேர்தலில் போட்டியிட்ட போது 300 பவுனுக்கும் அதிகமாக நகைகள் இருப்பதாகக் கணக்குக் காட்டியிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு என்னுடைய நகைகள் என்னிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுவிட்டன. எனது மகள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க இருக்கிறார். அவரது வசதிக்காக அமெரிக்க டாலர்கள் வாங்கி வைத்திருந்தேன்.
"என்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. பழமையான அந்தக் காரின் மதிப்பு ரூ.5 லட்சம்தான். எனக்கு ரூ.40 கோடி கடன் உள்ளது.
"எங்கள் குடும்பம் பெரிய வியாபாரக் குடும்பம். ஆண்டுதோறும் நான் வருமான வரி செலுத்துகிறேன். எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது. கணக்கில் வராமல் எதுவுமே எங்களிடம் இல்லை. திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்மை இதுதான்," என்று கே.சி.வீரமணி தெரிவித்தார்.