புதுடெல்லி: மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்த போதும், நகராட்சித் தலைவராக இருந்தபோதும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக நட வடிக்கை எதுவும் எடுக்காததால் மகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
அதாவது, "ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்," என்று சங்கரநாராயணன் தீர்ப்பளிக்க, "இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து எந்தப் பயனும் இல்லை," என ஹேமலதா தீர்ப்பளித்தார்.
இதனால் இவ்வழக்கு தலைமை நீதிபதியின் மூலம் மூன்றாவது நீதிபதியான நிர்மல்குமாரிடம் மாற்றப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
அவரது மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் ராஜேந்திர பாலாஜி சற்று நிம்மதி அடைந்துள்ளார்.

